Wednesday, February 24, 2010

30. "யூதாஸ் ஸ்காரியோத்" இயேசுவை காட்டிக்கொடுத்து நரகத்துக்கு போகவேண்டும் என்று பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா?

கேள்வி: இயேசுவைக் காட்டிக்கொடுத்த சீஷன் யூதாஸ் ஸ்காரியோத். இவன் பிறக்கும் முன்பே தேவன் அவனைத் தெரிந்தெடுத்து இவன்தான் இயேசுவை காட்டிக்கொடுப்பவன், இவன் நரகத்துக்குப் போவான் என்று முன்குறித்துவிட்டாரா?

அப்படியானால் நாம் ஏன் அவனைக் குற்றப்படுத்தவேண்டும்? நம்முடைய வாழ்விலும் நாம் செய்யும் காரியத்துக்கெல்லாம் காரணம் தேவன் தானே? ஆதாம்-ஏவாள் வாழ்வில் தேவன் இவர்கள் பாவம் செய்வாகள் என்று அறிந்திருந்தாரா? இல்லையா? என்றெல்லாம் தொடர் கேள்விகள் எழுப்பத்தோன்றும்.

பதில்: மனிதனுக்கு தேவன் கொடுத்த மிகமிக முக்கியமான தன்மை என்னவெனில் "சுய சித்தம் அல்லது சொந்த சித்தம்" (free will). அதாவது மனிதன் தான் என்ன செய்ய விரும்புகின்றானோ அதை அவன் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் தேவன் செய்யாதே என்று சொல்லியும் தான் மீறி அதைச் செய்யும் அளவுக்கு மிகவும் இடம் (அல்லது சுதந்திரம்) கொடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை பெற்று கீழ்ப்படிந்தவர்கள் நினிவே பட்டணத்தார். எச்சரிக்கை பெற்று கீழ்ப்படியாமல் போனவன் சாலொமோன். சாப்பிடாதே என்று சொல்லியும் கீழ்படியாமல் போன சிங்கம் கொன்ற தேவமனுஷன் மற்றும் ஆதாம்/ஏவாள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாரும் தங்களுடைய சுயசித்தத்தின்படி செய்த பிழைக்கு தேவன் பொறுப்பல்ல.

உதாரணமாக: ஒரு பேருந்து பெங்களூர் செல்லுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதின் வழியில் திடீரென்று பெய்த மழையில் ஒரு பாலம் வழுவில்லாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றது. இதில் ஒரு பேருந்து பெங்களூரோ, சேலமோ எங்கே சென்றாலும் பாலம் கடக்கும்போது ஆபத்துள்ளது என்று
பாலத்தை தொலைவில் இருந்து பார்த்த சிலருக்கு நன்றாகவே தெரியும் . அப்படியே தேவன் நாம் செல்லும் வழியினை அறிந்திருக்கிறார். எனவே நம் எதிர்காலத்தைக் காண்கிறார்.

இயேசு "உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்று முதன் முதலாக வாயைத்திறந்து சொன்ன இடம் மத்தேயு 26ல் தான். அதற்குமுன் அவர் யூதாஸின் போக்கை அறிந்திருந்தார், ஆனால் சொல்லவில்லை. மேலே உதாரணத்தில்: பேருந்து செல்லும் பாதை முன்னே தெரிகின்றது, பாலத்துக்கு அருகில் இன்னும் வரவில்லை.

தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதற்காக அவரை இந்த உலகத்திற்கு தந்தருளியிருக்கிறார் என்று நாம் அனைவரும் அறிவோம். (யோவான் 3:16) .

மேலும் மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
எனவே யூதாஸ் ஸ்காரியோத் கெட்டு நரகத்துக்குப்போவது தேவனுடைய சித்தமல்ல. இவன் நரகத்துக்குப்போவான் என்று முன்குறிக்கவில்லை. ஒருவேளை காட்டிக்கொடுத்தபின்பு மனம் திரும்பியிருந்தால் தேவன் அவனை மன்னித்திருப்பார். பேதுரு மறுதலித்தபின்பு மனம் கசந்து அழுதான். ஆனால் யூதாஸ் தெரிந்துகொண்ட பாதை தூக்கு (மனம்திரும்பவில்லை) என்பதாய் இருக்கின்றது. தன்னுடைய சுய சித்தத்தின்படி யூதாஸ் எடுத்த முடிவுகளுக்கு தேவன் பொறுப்பல்ல.
சுயசித்தம் (free will) என்ற விஷயத்தை தேவன் மனிதனுக்கு கொடுக்காவிட்டால் அவன் ஆட்டி விளையாடப்படும் பொம்மையாகிவிடுவான் என்று அறிவோம்.

எசேக்கியேல் 18:23 துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.