Sunday, October 30, 2011

74. Wine மதுபானம் குடிக்கலாமா?

கேள்வி: பவுல் சொல்லும்போது: "நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும்(wine) கூட்டிக்கொள்." எனவே கொஞ்சம் மதுபானம் கொள்வது சரியா? 

பதில்: இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே. 

கானாவூர் கலியாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது. தண்ணீரை மதுபானமாக மாற்றவில்லை. ஆங்கிலத்தில் King James Version-ல் wine என்று மொழிபெயர்த்துள்ளதால் வந்த குழப்பங்கள்தான் இவை. கிரேக்க மொழியில் இங்கே oinos [οἶνος ] என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க திராட்சை பழச்சாறு அதாவது PURE GRAPE JUICE என்றே பொருள்படும். YLT (Young Literal Translation) எனப்படும் மொழிபெயர்ப்பினை பார்க்கவும். தீமோத்தேயு என்பவர் தேவ ஊழியர் இவர் குடிக்க "தண்ணீர்மாத்திரம்" பயன்படுத்தி வைராக்கியமாக இருந்திருக்கிறார். மற்ற பானங்களை குடித்ததாக சொல்லப்படவில்லை. 

ஆனால் தீமோத்தேயு சரீரத்தில் பலவீனமாக இருந்திருக்கிறார். எனவே பவுல் அக்கறைகொண்டவராக திராட்சைப்பழம் உடலுக்கு நல்லது என்ற யோசனையில் தீமோத்தேயுவுக்கு அப்படியாக சொல்கிறார். தீமோத்தேயுவுக்கு என்ன பலவீனம் என்று நமக்கு சொல்லப்படவில்லை. கிராமங்களில் "ஒரு ஆட்டுக்கால் சூப் வைத்து குடி" என்று சொல்வது போன்ற ஒரு யோசனையாக எடுத்துக்கொள்ளலாம்.  

வேதாகமத்தில் இப்படியாக வாசிக்கிறோம்: 

ஏசாயா 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! 

நீதி 23: 29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், [கலப்புள்ள] சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
 

நீதி 23: 20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே

மதுபானம்(Wine) இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.  

லேவி 10:19-10 நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.

10. பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,

11. கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

இன்று உலக அளவில் "குடிப்பழக்கம் உடலுக்கு கேடு" என்று விளம்பரங்களே செய்யப்படுகின்றன. "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனை அழிப்பார்(destroy). நீங்களே அந்த ஆலயம்" என்று வாசிக்கிறோமே. 

எனவே அன்புக்குரிய தேவனுடைய பிள்ளைகளே, நாம் வஞ்சிக்கப்படாதிருப்போமாக. உங்கள் சரீரம் தேவனுக்குச் சொந்தம். நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே (you were bought with a price). கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள், கிரக்கத்திற்கு விலைபோகலாமா? நித்தியத்தை "சிறு துளி பேரிழப்பு" என்று தொலைக்காதிருப்போமாக. Wine மதுபானம் குடிக்காதீர்கள்.