
பதில்:
அந்த மரத்தில் கனிகள் அப்போது இல்லை. மேலும் அக்காலம் அத்திப்பழக்காலமுமல்ல. இருப்பினும் அதை பட்டுப்போகும்படி செய்தார். அத்திப்பழக்காலத்தில் அந்த மரம் அதற்குமுன் காய்த்ததா? என்ற கேள்விக்கு பதில் "தெரியாது". இயேசு அந்த மரத்தை ஏன் "எருசலேமிலே" பட்டுபோகும்படி செய்தார், ஏன் வேறே ஊரில் அதைச் செய்யவில்லை என்று சற்றே யோசித்துப்பார்ப்போம். என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி இந்த நிகழ்விற்கு சில காரணங்களை நான் வைக்கிறேன்.
[1] லூக்கா 13:6-9, யோவான் 15:2, மத்தேயு 7:19
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
மத்தேயு 7:19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
==> இங்கே கனி கொடாத மரமும், நல்ல கனிகொடாதமரமும் வெட்டப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுதான் அங்கே நடந்திருக்கவேண்டும். மேலும் இங்கே ஒரு மேலான ஆவிக்குரிய அர்த்தமும் உள்ளது; குறிப்பாக யோவான் 15ம் அதிகாரத்தில் நான் திராட்சைச்செடி நீங்கள் கொடிகள், என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர்(பிதா) அறுத்துப்போடுகிறார். எனவே நாம் கனிகொடுக்கும் ஜீவியம் செய்யாவிடில் அல்லது நாம் கெட்ட கனிகள் கொடுத்தால் நாமும் அப்படியே நிலைபெறமாட்டோம்.
[2] மாற்கு 13:28
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
==> இந்த வசனம் ஒரு தீர்க்கதரிசனம். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் யூதர்கள் அத்திமரத்துக்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளனர். அந்த அத்திமரம் பட்டுப்போன நிகழ்வு என்பது யூதர்கள் முழுதும் ("வேர் முழுதும் சீக்கிரமாய் பட்டுப்போயிற்று") சீக்கிரமாய் சிதறடிக்கப்படப்போகின்றனர் என்பதன் அடையாளமான செயல் என்று விளக்கம் கொடுக்கலாம். அப்படியே அவர்கள் சிதறடிக்கப்பட்டபின்பு "இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது" என்பது அவர்கள் மீண்டும் ஒன்றாககூடுவர் என்பதன் முன்னுரைப்பு ஆகும். அநேக வேதபண்டிதர்களும் இதே விளக்கம் கொடுக்கின்றனர். அப்படியே இஸ்ரவேல் என்னும் தேசம் 1948ம் வருடம் உருவானது. இன்னும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர். இருப்பினும் அந்த "அத்திரம் துளிர் விட்ட நிகழ்வு" நம்முடைய நூற்றாண்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே "எருசலேமிலே" இயேசு செய்தது அந்த தீர்க்கதரிசனத்திற்கு ஒரு அடையாளச் செயல் எனலாம்.
[3] "இத்தனை சீக்கிரமாய் பட்டுப்போயிற்றே" என்ற ஆச்சரியத்துக்கு இயேசு மிகவும் முக்கியமான பதில் தருகிறார்:
==> இந்த சம்பவத்தின் மூலம் நாமும் ஒரு மரத்துடன் பேசமுடியும் என்று புரிகிறது. ஒரு மலையை பெயர்ந்து கடலில் தள்ளுண்டுபோ என்பது நிஜத்தில் சாத்தியமில்லை என்று சிலருக்கு தோன்றினாலும், அது இயேசு சொன்னபடிதான்; ஏனெனில் இயேசு பொய் சொல்லவில்லை. இது விசுவாசத்தின் உயர்நிலையைக் குறிக்கிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெறுவீர்கள் என்ற வசனமும் இந்த அத்திமர நிகழ்வுக்குபின்புதான் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இல்லாவிடில் ஏது அந்த வசனம்?
சிந்தனைக்கு:
மத்தேயு 6. காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
நோவாவின் காலத்தில் எத்தனையோ விலங்குகள் ஜலப்பிரளயத்தில் இறந்துபோயின. ஆனால் அவைகளைக்குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு மரத்தைக்குறித்து உலகில் ரொம்பவேதான் கவலைப்படுகின்றனர். இந்த சம்பவமில்லாவிடில் மலையைப் பெயர்க்கும் விசுவாசத்தின் உயர்வான படியை நான் அறிந்திருக்கமாட்டேன். தேவன் சகலத்தையும் நன்மைக்காகவே செய்கிறார் என்று வாசிக்கிறோமே. ஏனெனில் 2000ம் வருடங்கள் கழித்து இன்றும் அந்த மரம் விசுவாசத்தைக்குறித்து பேசப்படும் ஒரு சின்னமாக உள்ளதே என்பதில் அந்த மரத்துக்கு அது ஒரு சிறப்புதான்!
5 comments:
sir/madam ,
very useful to this site
thank u
David
it is very useful to Intensify our faith
thank U
it is very useful to Intensify our faith
thank U
very useful to this site
It is very useful. god bless u
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.