பதில்:
அநேகர்களுக்கு பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது தேவன் கோபமானவர் என்றும், புதிய ஏற்பாட்டில் அன்பானவர் என்றும் எண்ணம் தோன்றுகிறது. உண்மையில் அப்படி அல்ல. (Just a wrong perception).
இந்தக் கேள்வியானது அநேக வருடங்களாக கிறிஸ்தவர்களின் மனதிலே தோன்றியது. சபையின் தந்தையர்களின் காலத்தில் "மார்சியன்(Marcion)" என்பவர் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி பழைய ஏற்பாட்டிலுள்ள தேவன் என்பவர், இயேசு குறிப்பிட்ட பிதாவை விட குறைவாக இருந்தார் என்று சொல்லி, புதிய ஏற்பாட்டில் எங்கெல்லாம் சிருஷ்டிகர் என்பவர் தீமையானவர் என்ற தோற்றம் எழுகிறதோ அதையெல்லாம் நீக்கிப்போடவேண்டும் என்றார். கடைசியாக அவருக்கு லூக்கா எழுதின நிருபத்தின் சுருக்கம் ஒன்றே மிஞ்சியது. ஆனால் சபைகள் எல்லாம் மார்சியனின் மாறுபாடான உபதேசத்தை ஒதுக்கித்தள்ளியும், எல்லா ஆகமங்களும் ஒரே தேவனால் ஏவப்பட்டன (inspired). எனவே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் முடிவு தெரிவித்தன.
உண்மை என்னவெனில் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் (images) புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. யோவான் 1:18ல் சொல்லும்போது மிகவும் சரியாக "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்." என்கிறார். குமாரனாகிய இயேசுவில் காணப்பட்ட சுபாவங்கள்/குணங்கள்தான் பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனின் சுபாவம். பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் அன்புகூரும் அளவில் மாற்றமில்லை. பிதாவைவிட குமாரன் அதிக கண்டிப்பாயிருப்பதுமில்லை. புதிய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களை எழுதிவர்கள் அனைவரும் பழைய, புதிய ஏற்பாட்டுக்கும் ஒரேபோன்ற தொடர்ச்சியுள்ளது என்றும், பழைய ஏற்பாட்டின் தேவனுக்கும், கிறிஸ்து இயேசுவிடம் கொண்ட அனுபவத்திற்கும் ஒரே போன்றது என்று கண்டனர்.
இதைக்குறித்து மூன்று காரியங்களை விரிவாக பார்க்கலாம்:
[1] பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது.
[2] புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது.
[3] நியாயத்தீர்ப்பில் வித்தியாசம் என்பது காலத்துக்குள்ளும், காலத்தின் முடிவிலும்.
[1] பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது:
தேவன் தன்னைப்பற்றி தான் யார் என்று சொல்லும்போது முதலில் தான் ஒரு நியாயத்தீர்ப்பு செய்யும் தேவன் என்று சொல்லாமல், தான் அன்புள்ளவர் என்று சொல்லுகிறார். யாத்திராகமம் 34:6,7 "கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்."
இப்படித்தான் தன்னைப்பற்றி தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் அப்படிப்பட்டவரே! நன்றாக கவனியுங்கள் அந்த வசனத்தில், முதலில்: இரக்கம், கிருபை, அன்பு, உண்மையுள்ளவர் மற்றும் மன்னிக்கிறவர் என்று சொல்லி, பின்புதான்: தேவன் அன்பாயிருக்கிறார் என்று சொல்லி அதை தங்களுக்கு சாதமாக்கிகொண்டு அக்கிரமம் செய்பவர்களை நான் குற்றவாளியாக தீர்ப்பேன் என்று சொல்கிறார்.அப்படிப்பட்டவர்களை நியாயம்தீர்ப்பார்.
ஆதாம் பாவம் செய்தபின்பும் அன்பாகவே தேவன் தோட்டத்திலே வந்து உலாவுகின்றார். அங்கே அவர்கள் மனந்திரும்பவில்லை என்றாலும், அவர்களுக்கு தோலினால் உடைசெய்து கொடுக்கிறார். பழைய ஏற்பாடு முழுவதிலும், அவர் இஸ்ரவேல் ஜனங்களை அன்பின் நிமித்தமே தெரிந்துகொண்டார் என்று சொல்கிறார்; அவர்கள் அதற்கு தகுதியுடையவர்கள் என்பதால் அல்ல. அவர்கள் தகுதி அற்றவர்கள். எப்பொழுதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் முரட்டாட்டம் செய்தனரோ அப்பொதெல்லாம் தம்முடைய தீர்க்கதரிசிகளை அவர் அனுப்பி எச்சரித்தார். அவர்கள் அதற்கு கீழ்ப்படியாத பட்சத்தில் அவர்கள் ஒடுக்கப்படும்படி விடுகிறார். அவர்கள் தேவனை நோக்கி கூப்பிடும்போது இரக்கமுள்ளவராக அவர்களை விடுவிக்கிறார்! அப்படியாக அவர்கள் கஷ்டப்படும்போதுகூட ஓசியா 11:8ல் "எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள்ளே திரும்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது." என்று தேவன் சொல்கிறார். ஒருபுறம் அவருடைய நீதி நியாத்தீர்ப்பையும், மறுபுறம் அவருடைய அன்பின் இருதயம் தம்முடைய ஜனங்களுக்காக உடைந்தும், அவர்கள் கஷ்டத்தை விரும்பாமலும் இருக்கிறது.
ஓசியாவிலே சொன்னதுபோல் அவர் விபச்சாரிகளுக்கு கணவர். இங்கே தேவனை விட்டு வேறுதேவர்களை பின்பற்றுதல் விபச்சாரம் செய்வதுபோல் ஆகும். இருப்பினும் அவர் அவர்களை தம்முடைய கரத்திலே அணைக்கும்படிதான் விரும்புகிறார்; அதே சமயம் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விடுவதும் இல்லை! அவருடைய நோக்கமும் திட்டமும் வெறும் நியாயத்தீர்ப்பு அல்ல; ஆனால் அவர்களுக்கு கொடுக்கும் நியாத்தீர்ப்பினால் அவர்களைத் தம்மிடம் ஒரு குடும்பத்தைப்போல மீட்கும்படி அப்படிச் செய்கிறார்.
இப்படி அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டும் பாரபட்சமாக செய்யாமல், யோனா-வில் வாசிப்பதுபோல் நினிவே பட்டணத்தாருக்கும் இரக்கமாயிருந்தார் என்று வாசிக்கிறோமே. யோனா சொல்லும்போது: இதோ நான் தர்ஷீசில் இருக்கும்போதே நான் சொல்லவில்லையா? நீர் கிருபையும், இரக்கமும், அன்புமிகுந்தவர் என்றும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் என்றும் அறிவேன். யோனாவுக்கு தேவன் இரக்கமுள்ளவராக இருந்தது பிடிக்கவில்லை. நாற்பது நாளில் அழியும் என்று சொல்வதில் மகிழ்ச்சி. ஆனால் நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினபோது தேவன் மனதிரங்கி சீரியா தேசத்தார்களாகிய அவர்களை மன்னித்தது யோனாவுக்கு பிடிக்கவில்லை. நீர் ரொம்பத்தான் அன்பாயிருக்கிறீர், ரொம்பவே மன்னிக்கிறீர், என்று ஒரு குற்றச்சாட்டு. யோனாவும், ஓசியாவும் தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் நோக்கில் இல்லை, மன்னிக்கும் செயலில் இருக்கிறார் என்று அறிவுறுத்துகின்றனர். மனம் திரும்பாதவர்களை மன்னிக்கமுடியாது. எனவே அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து எச்சரிக்கிறார். அந்த தீர்க்கதரிசிகளை கொலைசெய்தால், மேலும் சில தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். அவர்கள் மனந்திரும்பினால் அந்த நியாயத்தீர்ப்பானது அவர்கள்மேல் வராமற்போகும். மனந்திரும்பாவிடில் நியாத்தீர்ப்பை அவர்கள்மேல் அனுப்புவதை தேவன் விரும்பாவிட்டாலும், அவர் நியாயத்தீர்ப்பை அனுப்பியே ஆகவேண்டும். அநேகமுறை அப்படிப்பட்ட கஷ்டத்திலும் அவர்களை மீட்டுக்கொள்ள மீண்டும் ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு "நல்ல" பெற்றோர், தவறு செய்யும் தன் பிள்ளையை ஒரு தண்டனை கொடுத்து திருத்த முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை.
[2] புதிய ஏற்பாட்டிலும் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது:
புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு((judgment in NIV) என்னும் வார்த்தை 108 முறை வருகின்றது. அவைகள் எல்லாவற்றிலும் அதிகமாக இயேசுதான் நியாயத்தீர்ப்பைக் குறித்துச் சொல்கிறார். அவர் சொல்லும்போது: "உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்(மத் 5:29,30)".
மத்தேயு 7:13-29; 24:45; 25:46 ஆகிய வசனங்களில் எச்சரிக்கை கொடுத்தவரும் இயேசுதான். புதிய ஏற்பாட்டில் மற்றெல்லாரைக்காட்டிலும் அதிகமாக நியாயத்தீர்ப்பைக்குறித்து பேசியது இயேசுதான். வெளிப்படுத்தின விசேஷம் யோவானுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டது. பலவிதமான நியாயத்தீர்ப்புகள் குறித்து புதிய ஏற்பாட்டில் உள்ளன. தன்னைத்தானே நியாயம்தீர்ப்பது(யோவான் 9:39; 12:47-49), தேவனின் நியாயத்தீர்ப்பு( யோவான் 8:50), தனிப்பட்டவர்களின் நியாயத்தீர்ப்பு( அப் 12:23) மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு (யோவான் 5:22,27) என உள்ளன. மனிதர் செய்யும் சில காரியங்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது (1 கொரி 6:9-10; கலா 5:19-21) மேலும் விரிவான நியாயத்தீர்ப்பின் காட்சிகள் (வெளி 20:11-15). இங்கே எல்லாம் நியாயத்தீர்ப்பைக்குறித்தும், அவைகளில் பல இயேசுவை உள்ளடக்கியும் உள்ளது. இயேசு இந்தவிஷயத்தில் பிதாவைப்போலதான்.
புதிய ஏற்பாடு கிருபை, அன்பு குறித்து போதிக்கின்றது; ஆனால் அன்பையும் கிருபையையும் அநேகர் புறக்கணிக்கக்கூடும். புதிய ஏற்பாடு கடைசி நியாயத்தீர்ப்புநாள் குறித்தும் சொல்லுகிறது. புதிய ஏற்பாட்டின்படி ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்புக்கு பாத்திரர்தான், ஆனால் தேவன் இப்போது எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என்று கிருபைமிகுந்தவராய் இருக்கிறார். அந்த கிருபையை ஜனங்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டால், மிகவும் பயங்கரமான முடிவு அவர்களுக்காக உண்டு. எனவே இங்கே பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதுபோலவே, புதிய ஏற்பாட்டிலும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் எச்சரித்தனர். புதிய ஏற்பாட்டில் தேவன் அப்போஸ்தலர்கள், போதகர்கள், சுவிசேஷகர் என்று அனுப்பி ஜனங்கள் மனந்திரும்பவேண்டும் என்றும் வரவிருக்கும் நியாயத்தீர்ப்புகுறித்தும் சொல்கிறார். எனவே இந்த விஷயத்தில் இரு ஏற்பாடுகளிலும் ஒற்றுமைதான் இருக்கின்றது.
[3] நியாயத்தீர்ப்பில் வித்தியாசம்:
பழைய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு [அவர்கள்] காலத்துக்குள் நடந்தது. இஸ்ரவேலர் பாவஞ்செய்தபோது அவர்கள் மரித்தெழுந்தபின் நரகத்துக்கு போவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவர்கள் மீதியானியராலும், அசீரியராலும் ஒடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். எனவே பழைய ஏற்பாட்டில் பல நியாயத்தீர்ப்புகளைக் காணலாம். நியாயாதிபதிகளின் புஸ்தகத்திலும், கானானியர், மோவாபியர், அம்மோனியர் மற்றும் பெலிஸ்தியர்கள் எல்லாரும் இஸ்ரவேலை தண்டித்தனர். பிற்காலத்தில் எகிப்தியர், அரேமியர, அசீரியர் மற்றும் பாபிலோனியர்கள் என்று வந்து ஒடுக்கினர். இவை எல்லாம் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தேறின. நமக்கு தீர்க்கதரிசி சொல்லும் பஞ்சம், வாதைகள், ராணுவம் சூழ்ந்துகொள்ளும் என்னும் எச்சரிக்கைகளை படிக்கும்போது மகிழ்வற்ற செய்தியாயிருக்கலாம், ஆனால் அவை நிஜவாழ்வில் பின்வரும் சம்பவங்கள் (இன்று சில இடங்களில் இருப்பதுபோல). மேலும் மனிதர்கள் மனந்திரும்பவேண்டும் என்று இவைகளை அனுமதிக்கிறார்; அவைகளில் பிரியப்படுவதில்லை.
பழைய ஏற்பாட்டில் இறந்தபின்பு வாழ்க்கையைக்குறித்து கொஞ்சம்தான் வெளிப்படுத்தப்பட்டது, அதுவும் பழைய ஏற்பாட்டின் கடைசி கட்டத்தில். ஜனங்கள் மரணம் எனபதை ஷீயோல் (Sheol) என்னும் மறைவான உலகிற்கு செல்வது என்றும் அங்கே தேவனைத் துதிப்பது என்று எல்லாம் இல்லை என்றும், கொஞ்சம் வாழ்வு இருக்கும் என்று எண்ணினர். அவர்களைப் பொறுத்தமட்டில் முதிர்வயதில் மரிப்பதும், பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பதும், அந்த பிள்ளைகள் தங்கள் பேரையும் புகழையும் கட்டிகாக்கவேண்டும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது; சிறுவயதில் இறப்பது நியாயத்தீர்ப்பென்று எண்ணினர். ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவன் எதிர்காலத்தைக்குறித்து அதிகமாக சொல்லியுள்ளார். எனவே நியாயத்தீர்ப்பு என்பது காலத்தின் கடைசியில் என்றும், மரித்தோர் உயிர்தெழுதல், நித்தியஜீவன், நரகம் எல்லாம் காலத்தின் முடிவில். காலத்தின் முடிவு என்பது கிறிஸ்துவின் வருகையில் இந்த வரலாறு முடிந்துபோகும்.
எனவே, பழைய ஏற்பாட்டில் தேவன் நியாயம்தீர்க்கும் தேவனாகவும், புதிய ஏற்பாட்டில் அன்புள்ள தேவனாகவும் இருக்கிறாரா? இல்லை. இரு ஏற்பாடுகளிலும் தேவன் அன்பாயிருக்கிறார் என்றும் அவரே நீதியுள்ள தேவனாக இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இனி வரவிருக்கும் பயங்காரமான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ள, தேவன் மனிதர்களுக்கு தன்னுடைய அன்பையும், மன்னிப்பையும் தருகிறார்.
2 comments:
Praise the LORD, Very nice explanation. Yes, GOD is always the same all the time. only people will change every now and then. Thank You Jesus for everything. Pls Bless all of us.
praise the lord. wonderful explanation. our god always graceful.
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.