Saturday, September 21, 2019

82. யூதா ராஜாவின் பெயர் உசியாவா, அசரியாவா? எது சரியான பெயர்?

கேள்வி: 2 இராஜாக்கள் 15:17-ல் யூதாவின் ராஜாவாகிய அசரியா என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 2 இராஜாக்கள் 15:32-ல் யூதாவின் இராஜாவாகிய உசியா என்று சொல்லப்பட்டுள்ளது. எது சரியான பெயர். தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

பதில்:
 சில சமயங்களில் பெயர்கள் குழப்பத்தை உண்டுபண்ணலாம். முதல்நாள் ஆசிரியர் வகுப்பில் மாணவ மாணவிகளின் பெயர் ஏட்டில் உள்ளதுபோல் இல்லாமல் வேறுபெயரால் சக மாணவர்களால் அழைக்கப்படுவதை கண்டு ஆச்சரியப்படலாம். எனவே வருகைப்பதிவேடு (Attendance) எடுக்கும்போது சிலர் 'உள்ளேன் ஐயா' என்று சொல்லாமல் இருப்பதைக்கண்டு சகமாணவர் உலுக்கி உன்னைத்தான் சொல்கிறார் என்று சொல்லுவதை பார்த்திருக்கிறோம்.  இதற்கு காரணம் என்னவெனில் அநேகர் பட்டைப்பெயர் அல்லது புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படுவதால்.

கோடிக்கணக்கானோர் தங்களுக்கு புனைப்பெயர் கொண்டுள்ளனர். இது வழக்கத்தில் பொதுவான ஒன்றாகும். அநேகருக்கு ஒருபெயருக்கும் அதிகமான பெயர் உண்டு. உங்கள் நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு ஒருபெயர், உங்கள் தாத்தா, பாட்டி உங்களுக்கு ஒருபெயர், உங்கள் அம்மா, அப்பா வீட்டில் அழைப்பது ஒருபெயர் என்று ஒருவருக்கு எத்தனையோ பெயர் உண்டு. இருப்பினும் எல்லோருக்கும் தங்களுக்கு  அரசாங்க பதிவேட்டில் ஒருபெயர் உள்ளது.

பைபிளிலும் பண்டைய காலங்களில் ஜனங்கள் ஒருபெயருக்கும் அதிகமான பெயர் வைத்துள்ளனர். இதை நாம் மனதில்கொண்டால் வேதாகமத்தில்  தெளிவற்ற பத்திகளாக (ambiguous passages) தோன்றுபவைகளுக்கு விளக்கம் கிடைக்கும்.

வேதாகமத்தில் ஆபிராம் என்ற பெயர்  ஆபிரகாம் என்று மாற்றப்பட்டது (ஆதியாகமம் 17:5) . யாக்கோபு என்ற பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது (ஆதியாகம் 32:28).  பின்பு எகிப்தில் பார்வோன், யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்று (ஆதியாகமம் 41:45) பெயர் சூட்டினான். பல தனிப்பட்டவர்களும் வேதாகமத்தில் ஒருபெயருக்கும் அதிகமான பெயரால் அழைக்கப்பட்டனர்.

  •  மோசேயின் மாமனார் : ரெகுவேல் மற்றும் எத்திரோ என்ற பெயரால் அறியப்பட்டான் (யாத் 2:18, 3:1)
  • கிதியோன்: யெருபாபேல் என்ற பெயர் பாகாலின் பலிபீடங்களை இடித்துப்போட்டதால் அவனுக்கு வழங்கப்பட்டது. (நியா 6:32; 7:1; 8:29,35).
  • அப்போஸ்தலனாகிய பேதுரு: சீமோன் பேதுரு என்றும், சீமோன் என்றும், கேபா என்றும் அழைக்கப்பட்டார். (மத் 14:28; 16:16; 17:25; John 1:42; 1 கொரி 1:12).
  • சவுல் என்பவர் பின்பு பவுல் என்று அழைக்கப்பட்டார். (அப் 13:9).

ஒரே நபரைக் குறிப்பிடும்போது பைபிள் எழுத்தாளர்கள் எவ்வாறு வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனென்றால் அத்தகைய பெயர் பயன்பாட்டை அங்கீகரிப்பது, சில கூறப்படும் முரண்பாடுகளை தெளிவுபடுத்த உதவும். உதாரணமாக, மத்தேயு 1: 9-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். மத்தேயு உசியாவை யோதாமின் தந்தை என்று ஏன் குறிப்பிட்டார் என்று யாராவது யோசிக்கலாம், அதே நேரத்தில் 2 இராஜா 15: 1-7 மற்றும் 1 நாளாகமம் 3:12-ல் யோதமின் தந்தை அசாரியா என்று அழைக்கிறார்கள். இரண்டு பெயர்களும் ஒரே நபருக்கு பொருந்தும் என்பதில் பதில் இருக்கிறது. அதே அத்தியாயத்தில் (2 இராஜா 15), யோதாமின் தந்தை அசாரியா (15: 7) மற்றும் உசியா (15:32) என்று அழைக்கப்படுகிறார். பெயர்கள் வேறுபட்டவை, ஆனால் அவை ஒரே நபரைக் குறிக்கின்றன (2 நாளாகமம் 26: 1-23; ஏசாயா 1: 1).

 இருபத்தியோராம் நூற்றாண்டில் மக்கள் இருப்பதைப் போல முன்னோர்கள் பெரும்பாலும் பெயர்களைக் கொடுப்பதில் நெகிழ்வானவர்கள் (flexible) என்பதை ஒப்புக்கொள்வதன் மூலம் எண்ணற்ற பைபிள் கேள்விகளுக்கு தர்க்கரீதியாக பதிலளிக்க முடியும்.


சிறுகுறிப்பு:
மற்ற மாநிலங்கள் நாடுகளிலெல்லாம் "முதற்பெயர்" மற்றும் "கடைசிபெயர்/குடும்பப்பெயர்" என்று  தங்களுக்கு பெயர் வைத்துள்ளனர். கடவுசீட்டில் (Passport) அப்படித்தான் உலகளவில் எழுதுகின்றனர். தமிழ்  நாட்டிலுள்ளவர்களுக்கு "கடைசிபெயர்/குடும்பப்பெயர்" இல்லை. பாஸ்போர்ட் எடுக்கும்போதுதான் கடைசிபெயரா, அப்படியென்றால் என்ன என்று கேட்கிறனர். தமிழன் மட்டும் தந்தையின் பெயரை கடைசிபெயராக (அல்லது முதற்குறியீடாக) வைத்துள்ளான். பைபிளிலும் முதற்பெயர் மட்டுமே எல்லாருக்கும் உள்ளது. அங்கே கடைசிபெயர் இல்லை. பைபிளில் எப்படி பெயர்  சொல்லப்படுள்ளதோ அதேபோன்ற  பெயர் கலாச்சாரத்தை இன்னும்  தமிழ் நாட்டவர்கள் கொண்டிருப்பது  ஆச்சரியம்.



0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.